தனுஷ்- ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க இந்தி, தெலுங்கு நடிகர்கள் சமரச முயற்சி..?

இரு வீட்டு குடும்பத்தினரும் தனுசையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

நடிகைகள் அமலாபால், சமந்தாவை தொடர்ந்து இப்போது நடிகர் தனுசும் காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிய முடிவு எடுத்து இருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய விருதுகள், இந்தி, ஹாலிவுட் பட வாய்ப்புகள். அதிக சம்பளம் என்று மார்க்கெட் அந்தஸ்து ஏறுமுகத்தில் இருந்த நிலையிலும் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் ஓம் நமச்சிவாயா என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்து எளிமையாக வலம் வந்த தனுசின் விவாகரத்து முடிவை பலரும் வியப்பாகவே பார்க்கின்றனர்.

விவாகரத்துக்கு வலைத்தளத்தில் பலரும் பல காரணங்கள் பேசுகின்றனர். தனுசை குற்றம் சாட்டியும் கருத்துகள் பரப்புகின்றனர். இரண்டு குழந்தைகள் எதிர்காலம் பற்றியும் கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அறிவுரை சொல்கின்றனர்.

தனுசின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இது சாதாரண குடும்ப தகராறுதான் என்கிறார். ரஜினிகாந்தும் கவலையில் இருக்கிறார். இந்த நிலையில் முன்னணி நடிகர்கள் சிலரும் இரு வீட்டு குடும்பத்தினரும் தனுசையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

ரஜினிகாந்துக்கு நெருக்கமான இந்தி, தெலுங்கு நடிகர்கள் தனுசையும் ஐஸ்வர்யாவையும் தொடர்பு கொண்டு பேசி இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இரு வீட்டு குடும்பத்தில் உள்ள சிலரும் நேரில் சந்தித்து பேசி சமரசப்படுத்தும், முயற்சியாக ஐதராபாத் விரைந்துள்ளனர். சமரசத்தை இருவரும் ஏற்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

தனுசுக்கு அறிவுரை வழங்கும் முயற்சியாக அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவனும் வேதனை அதிகமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அப்போது சரியான மனநிலை இருக்காது” என்று கூறியுள்ளார்.dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!