காட்டுராஜாவுடன் கள்ளக்காதல்… அலறிய தனலட்சுமி – கணவன் வெறிச்செயல்!

தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

திருப்பூர் வஞ்சிப்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 31). இவரது மனைவி தனலட்சுமி (25). குமார் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியை சரமாரி வெட்டினார். இதில் அவரது தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த வெட்டுக்காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதனிடையே தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததுடன், உடல் அருகில் கையில் அரிவாளுடன் குமார் அமர்ந்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்ட தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காசிதர்மம் புதுமனை தெரு பகுதியை சேர்ந்த குமாருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனலட்சுமிக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. அவர்களுக்கு சுதன் (9), கவுதம் (7)என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த குமார் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து உறவினர்கள் 2 பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் வேலைக்காக திருப்பூர் வந்தனர். மகன்கள் 2 பேரையும் கடையநல்லூரில் உள்ள தனலட்சுமியின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர்.

திருப்பூர் ஜே.ஜே.நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக தனலட்சுமிக்கும், குமாருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த குமார் மனைவியை சரமாரி வெட்டிக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் மனைவியை கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!