வேட்டைக்கு சென்ற சிறுவனை கடத்திச் சென்ற சீன ராணுவம்!

சீன ராணுவத்தால் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அருணாசல பிரதேசத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனா இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது.

இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது. இதையடுத்து அங்கு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவம் முகாமிட்டு உள்ளனர்.

அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீனா இரண்டு கிராமங்களை உருவாக்கியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மிரம் தரோன் (17), ஜானி யாயிங் (27). இவர்கள் இருவரும் அருகில் உள்ள துதிங் பகுதிக்கு நேற்று முன்தினம் வேட்டையாடச் சென்றனர்.

சீன எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் வைத்து இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்தது. ஆனால் வாலிபர் ஜாணி யாயிங் அங்கிருந்து தப்பி வந்தார். ஆனால் சிறுவன் மிரம் தரோன் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், சீன ராணுவத்திடம் இருந்து சிறுவன் மிரம் தரோனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொகுதியின் எம்.பி.யான தபிர் காவோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை இணை மந்திரி நிஷித் பிரமாணிக்கிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!