குடும்ப சண்டைதான்… விவாகரத்து இல்லை – தனுஷ் தந்தை

பிரபல இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, தனுஷ் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், கஸ்தூரி ராஜா. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகன், டைரக்டர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ். இவருக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டார்கள். இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்தார்கள். இதுபற்றி தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது:

‘‘தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை. இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் இருக்கிறார்கள். நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன்’’ என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!