காலையில் கண் விழித்ததும் கட்டாயம் செய்ய வேண்டியவை..!

காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் உடல் நலனை சீராக பேணலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்…


காலையில் கண் விழிக்கும்போது உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கை, கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறியுங்கள். இது சுறுசுறுப்புக்கு வித்திடும்.

அதிகாலையில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

படுக்கையில் இருந்து காலையில் எழுந்ததும் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது உடல் உள்உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

இரவில் சீரகம், வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்துவிட்டு அதனை காலையில் சாப்பிட்டு வரலாம். எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும்போதே இவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டுவிடுவது நல்லது.

இரவில் நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊறவைத்துவிட்டு காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

காலையில் தண்ணீர் பருகிய பின் சிறிது நேரம் கழித்து கிரீன் டீ பருகலாம். அதனுடன் பிரெட்டும் சாப்பிடலாம்.

ஒரு டம்ளர் சூடான நீருடன் எலுமிச்சை சாறும், சிறிது தேனும் கலந்து பருகலாம். அல்லது பழ ஜூஸும் உட்கொள்ளலாம்.

காலையில் படிப்பது, கடினமான விஷயங்களை யோசிப்பது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். ஏனெனில் காலைப் பொழுதில் மூளை களைப்பு நீங்கி புத்துணர்ச்சியோடு இருக்கும்.

ஆரோக்கியமான உடல் நலத்தை பேணுவதற்கு காலை உணவு அவசியம். அன்றைய நாளை சோர்வின்றி இயங்கவும் வைக்கும். அதனால் ஒருபோதும் காலை உணவை தவிர்க்கக்கூடாது.

உடலியல் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு மதிய உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அவசியம். மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அன்றாடம் உண்ணும் உணவு சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் சத்தான உணவு, மூளையின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். அதில் இரும்புச் சத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ரத்தசோகைக்கு ஆளாக நேரிடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!