முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் மீட்பு!

பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவர் மற்றும் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அருகே ஆத்திரிக்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் ஒரு மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேந்திர பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்த மகேஷ் மனைவி கலையரசி (வயது 37) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. கடந்த ஒருவருடத்துக்கு முன்பு கலையரசியி்ன் நடத்தையில் அவரது கணவர் மகேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலையரசி தனது கணவர் குடிக்க வைத்திருந்த மதுவில் விஷத்தை கலந்து வைத்திருந்தார். அதை குடித்த மகேஷ் பரிதாபமாக இறந்தார்.
மேலும் மீதம் இருந்த மதுவை குடித்த மகேசின் நண்பரான திருவதிகையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் இறந்தார். இந்த கொலை வழக்கில் கலையரசி கைது செய்யப்பட்டார். இதில் ஜாமீனில் வெளியே வந்தநிலையில் கலையரசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!