ஆன்லைனில் ஆர்டர் செய்தது கைக்கடிகாரம்- பார்சலில் வந்த பொருளால் அதிர்ச்சியான நபர்!

கேரளாவில் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அணில்குமார்(வயது32). இவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்தார். அத்துடன் அந்த கடிகாரத்துக்கான பணம் ரூ.2 ஆயிரத்து 400-ஐயும் செலுத்தினார்.

அவருக்கு 15-ந் தேதி அந்த கடிகாரம் வந்து சேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அணில்குமாருக்கு நேற்று முன்தினம் ஒரு பார்சல் வந்தது. உடனே அவர் தான் ஆர்டர் செய்த கைக்கடிகாரம்தான் வந்து உள்ளது என்று நினைத்து அதை வாங்கி ஆவலுடன் பிரித்தார்.

அப்போது பார்சலில் வந்த சிறிய அட்டைபெட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார். அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு கொடுக்கும் வேலைதான். ஆனால் அதில் ஆணுறை வந்தது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.

உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அணில்குமார், இது குறித்து ஆலுவா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!