ரெயில் இருந்து ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் – மிரட்டும் வடகொரியா.!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஆண்டில் 3-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5-ம் தேதி வடகொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11-ம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2-வது பரிசோதனை செய்தது.

இதையடுத்து, ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகள் விதித்தது. வடகொரியாவை சேர்ந்த 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 10 நாட்களில் மேற்கொள்ளப்படும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த ஆண்டு இது 3-வது பரிசோதனையாகும். இன்று மொத்தம் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.

ரெயில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கடல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!