காணாமல் போன கல்லூரி மாணவி… பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் வந்த கல்யாண போட்டோ!

மார்த்தாண்டம் அருகே ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த மாணவி, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகளுக்கு 18 வயது ஆகிறது. இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவியும், அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்திருந்த 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

திடீர் மாயம்

இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில், மகளை யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காதலனுடன் திருமணம்

இந்தநிலையில் மாணவி தனது பெற்றோருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார். அதில், காதலனுடன் கோழிக்கோட்டில் இருப்பதாகவும் அங்குள்ள ஒரு கிருஷ்ணன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி கணவன், மனைவியாக வாழ போவதாகவும், திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் வாட்ஸ்-அப்பில் தெரிவித்துள்ளார். மேலும் காதலனுடன் திருமணம் செய்து மாலை மாற்றிக் கொண்ட புகைப்படங்களையும் அனுப்பியதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!