பல மணி நேரம் கழிவறையிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட பெண் பயணி.!

விமானத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பெண் பயணி பல மணி நேரம் கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டார்.

அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மரிசா ஃப்டியோ. இவர் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், மரிசா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணமாக கடந்த 19-ம் தேதி சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டனர். சிகாகோவில் இருந்து விமானம் மூலம் ஐஸ்லாந்து செல்லும் விமானத்தில் புறப்பட்டனர். சிகாகோவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமான சேவை இல்லாததால் ஐஸ்லாந்தில் இறங்கி அங்கிருந்து அடுத்த விமானத்தில் மாறி செல்ல வேண்டும்.

சிகாகோவில் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக மரிசா 2 முறை பிசிஆர் பரிசோதனை மற்றும் 5 முறை ரேபிட் பரிசோதனை செய்துள்ளார். இந்த அனைத்து பரிசோதனையிலும் மரிசாவுக்கு கொரோனா இல்லை (’நெகட்டிவ்’) என்றே முடிவு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மரிசா பூஸ்டர் டோஸ் உள்பட 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

விமானத்தில் சக பயணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மரிசா பயணம் செய்துகொண்டிருந்தார். அட்லாண்டிக் கடல் பரப்புக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது மரிசாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தனக்கு கொரோனா இருக்குமோ? என்று சந்தேகத்த அவர் விமானத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தான் வைத்திருந்த ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு ’கொரோனா பாசிடிவ்’ என பரிசோதனை முடிவு வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மரியா செய்வதறியாது திகைத்துள்ளார்.

பின்னர் தன்னை நிதானப்படுத்திய மரிசா, விமானத்தில் பணிப்பெண் ராக்கி என்பவரை அழைத்து தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தான் தனிமைப்படுத்திக்கொள்ள ஒரு இடம் வேண்டும் எனவும் மரிசா கூறியுள்ளார். இதைக்கேட்ட விமானப்பணிப்பெண் ராக்கி பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என கருத்தினார். மேலும், மரிசாவை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் எனவும் எண்ணினார்.

ஆனால், விமானத்தில் பயணிகள் அனைத்து இருக்கையிலும் இருந்திருந்ததால் ராக்கி செய்வதறியாது திகைத்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தும் வகையில் இருக்கை எதுவும் இல்லை, பயணிகள் அதிக அளவில் உள்ளனர் என்று மரிசாவிடம் ராக்கி கூறியுள்ளார்.

இதைக்கேட்ட மரிசா, தன்னால் பிறர் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டக்கூடாது என்பதற்காக விமானத்தின் கழிவறையிலேயே அமர்ந்துகொள்கிறேன் என்று ராக்கியிடம் கூறினார். இதையடுத்து, விமானத்தில் உள்ள ஒரு கழிவறையில் மரிசா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அந்த கழிவறையை பிறர் பயன்படுத்தாத வகையில் விமானப்பணிப்பெண் ராக்கி அதை பூட்டி வைத்தார்.

விமானம் ஐஸ்லாந்தில் தரையிறங்கும் வரை 3 மணி நேரத்திற்கு மேலாக மரிசா விமானத்தின் கழிவறையிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். விமானம் தரையிரங்கிய உடன் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் மரிசா விமானத்தின் கழிவறையில் இருந்து வெளியேறி கடைசியாக விமானத்தில் இருந்து கிழே இறங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருக்கு விமான நிலையத்தில் இருந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் மரிசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவ ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

இதனால், அவர் ஐஸ்லாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரொனா ’நெகட்டிவ்’ என முடிவு வந்தது. இதனை தொடர்ந்து, மரிசா இன்று சுவிட்சர்லாந்து புறப்பட்டார்.

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் விமான கழிவறையில் தனிமைப்படுத்திக்கொண்ட நிகழ்வை மரிசா வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!