சீன நகரத்தில் ஒருத்தருக்கு கொரோனா தொற்று – வியப்படையச் செய்த அதிரடி முடிவு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு உலக அளவில் இதுவரை 27 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சத்து 85 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முழுமையாக மீளவில்லை. எனினும் கொரோனா கண்டறியப்பட்டவுடன் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் உலக அளவில் பாதிப்பு பட்டியலில் சீனா 113 வது இடத்தில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 77 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியாட்னாம் நாட்டை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் டாங்ஜிங் நகரில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதிரடி நடவடிக்கைகளை மாநகர நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. டாங்ஜிங் நகரம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு மாநகரம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சர்வதேச பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!