அமெரிக்காவில் படிக்கும் சென்னை மாணவியை மிரட்டிய குடும்ப நண்பர் அதிரடி கைது!

ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க, அமெரிக்காவில் படிக்கும் சென்னை மாணவியிடம், ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். இவருடன் குடும்ப நண்பராக பழகி வந்த சென்னை அரசு பெண் அதிகாரியின் மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ரமேஷ்தான் உடன் இருந்து கவனித்தார். ரமேஷ் தற்போது சென்னை வந்து விட்டார்.

அரசு பெண் அதிகாரி தனது மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகிறார். இந்தநிலையில், பெண் அதிகாரியின் மகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

அந்த தகவலில், உனது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது, அவற்றை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி பணம் தர வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு சென்னையில் இருக்கும் அரசு பெண் அதிகாரி துடித்து போனார். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற தகவலை அனுப்பி மிரட்டுபவர் யார்?, என்று தெரியாமல் பெண் அதிகாரி கடும் குழப்பம் அடைந்தார்.

இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் வலியுறுத்தினார். உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அவர் நடத்திய அதிரடி விசாரணையில், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த நபர், என்ஜினீயர் ரமேஷ் என்று தெரியவந்தது. அவர் வேறொருவர் பெயரில் இந்த மிரட்டல் துரோக நாடகத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்ப நண்பராக உயிருக்கு, உயிராக பழகிய ரமேஷ், இதுபோன்ற துரோகச்செயலில் ஈடுபட்டது போலீசாருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அரசு பெண் அதிகாரியும், இதைக்கேட்டு மனம் உடைந்தார்.

ரமேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டியது ஏன்? என்பது பற்றி அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நான் அரசு பெண் அதிகாரிக்கு, அவரது வீட்டை பெரிதாக கட்டுவதற்கு ரூ.50 லட்சம் வரை கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்தார். மேலும் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். திருமணம் நடந்தால், நமக்கு பணம் திரும்பி கிடைக்காது. எனவே திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கு, இந்த மிரட்டல் நாடகத்தை நடத்தினேன்.

பெண் அதிகாரியின் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, நான்தான் உடன் இருந்து கவனித்தேன். அப்போது அவர் செல்போனில் வைத்திருந்த அவரது ஆபாச படங்களை நான் எனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த படங்களை வைத்துதான் மிரட்டல் செய்தி அனுப்பினேன். இவ்வாறு ரமேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர். ரமேசின் செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீசார் தெரிவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!