உதவிகள் கிடைத்தும் பலனில்லை… காலமானார் சிவசங்கர் மாஸ்டர்!

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் உடனிருந்து கவனித்து வந்தார்.

இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.

இந்நிலையில், டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!