மரணமடைந்த செய்தி தெரியாமல் புனித் ராஜ்குமாருக்காக காத்திருக்கும் அத்தை!

புனித் ராஜ்குமார் மறைவால் காஜனூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள காஜனூர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். புனித் ராஜ்குமார் மறைவால் காஜனூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் புனித் ராஜ்குமாரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். புனித் ராஜ்குமாரின் அத்தையான நாகம்மாவும் அந்த கிராமத்தில்தான் வசித்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

அவருக்கு, புனித் ராஜ்குமார் இறந்த செய்தி இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. புனித் ராஜ்குமார் மீது மிகவும் அன்பு கொண்ட அவர், இந்த செய்தியை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்துவிடுவார் என்ற பயத்தில் அவரிடம் யாரும் இந்த செய்தியை சொல்லவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

புனித் ராஜ்குமார் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று தனது அத்தையை பார்த்து வருவாராம். தற்போது அவர் இறந்துவிட்டார். ஆனால் அவர் தன்னை காண விரைவில் வருவார் என்று ஊர் மக்களிடம் அவருடைய அத்தை நாகம்மா கூறி வருகிறாராம். இது பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!