கொலை மிரட்டல் வருகிறது… சமீர் வான்கடேவின் மனைவி பரபரப்பு புகார்!

தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மனைவி தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இதற்கிடையில், ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து சமீர் வான்கடேவை குறிவைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆர்யன் கானை திட்டமிட்டு இந்த சதிவலையில் சிக்கவைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான சமீர் வான்கடே போலியான சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார் என நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். சமீர் வான்கடே ஒரு முஸ்லீம் என தெரிவித்துள்ள நவாப் மாலிக், போலியான ஜாதி சான்றிதலை பயன்படுத்தி பட்டியலினத்தவர்கள் இடஒதுக்கீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இணைந்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக, ஒரு ஜாதிச்சான்றிதழையும், சமீர் வான்கடேவின் திருமண புகைப்படத்தையும் நவாப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நவாப் மாலிக்கின் கருத்துக்கு நேற்று அறிக்கை மூலம் பதிலளித்த சமீர் வான்கடே, ‘நான் பல மதங்களை கொண்ட மதச்சார்பற்ற குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இந்து, தாயார் முஸ்லீம். எனது தனிப்பட்ட ஆவணங்களை டுவிட்டரில் வெளியிடுவது அவதூறானது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின் தனியுரிமைக்கும் எதிரானது. நவாப் மாலிக்கின் அவதூறு தாக்குதலால் வேதனையடைந்தேன்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடேவின் மனைவி ஹரந்தி ரெக்கர் வான்கடே இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவில் முறைகேடுகள் நடத்துள்ளதாக நவாப் மாலிக் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு எந்த வித மதிப்பும் கிடையாது. எனது கணவர் தவறு செய்யவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்?. எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் நபர்கள் தான் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். நாங்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல. நாங்கள் சாதாரண மக்கள். சமீர் நேர்மையான அதிகாரி. போதைப்பொருள் தடுப்பு பிரிவு பதவியில் இருந்து சமீர் நீக்கப்படவேண்டும் என நினையபேர் நினைக்கின்றனர்.

எனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. ஆகையால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவில் தற்போது உள்ள பதவியில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டால் பலர் பயனடைவார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!