பிரியாணியுடன் தடபுடல் விருந்து – ஆன்லைனில் ஜோடி தேடி 2 நாய்களுக்கு திருமணம்!

நாய்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்கள் உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு அர்ஜூன், ஆகாஷ் என 2 மகன் உள்ளனர்.

இவர்கள் தங்கள் வீட்டில் குட்டப்பு என்ற நாய் குட்டியை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் குட்டிக்கு ஒரு வயது ஆகிறது. இதனால் தங்கள் நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக பல்வேறு இடங்களில் பொருத்தமான பெண் நாய் குட்டியை தேடி வந்தனர். எங்கும் கிடைக்காததால் ஆன்லைனில் தேடினர். அப்போது கொச்சி அருகே உள்ள ஒரு வீட்டில் பெண் நாய் குட்டி இருப்பதாக தெரிய வந்தது.

இதுகுறித்து நேரில் சென்று அந்த நாய் குட்டியை பார்த்தனர். அது தங்கள் நாய்க்கு பொருத்தமான ஜோடியாக இருக்கும் என்ற நினைத்தனர். இதனால் ஜான்வி என்ற அந்த நாய்க்கும் தங்களின் குட்டப்பு நாய் குட்டிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி திருச்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு 2 குடும்பத்தினரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாய்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்கள் உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக போலீசில் சிறப்பு அனுமதி பெறப்பட்டிருந்தது.

நாய் குட்டிகளுக்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!