ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள் – உத்தரபிரதேசத்தில் அதிசயம்!

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன.

உத்தரபிரதேசத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் அதிசய மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த தோட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது. இந்த மரக்கன்றுகளை உத்தரபிரதேச வேளாண் பயிற்சி நிலைய இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத் என்பவர் நட்டார். ஆய்வுக்காக நடப்பட்ட இந்த மரத்தை பராமரித்து காப்பதற்காக தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். இந்த மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் கிடைத்துள்ளன.

அதாவது ஒரே மரத்தில் தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் உள்ளன. இந்த அதிசய மரத்தை பற்றி அறிந்து அதை காண சகரான்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றில் பலவகையான மாம்பழங்கள் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இன்றும் கிடைத்து வருகின்றன. இதில் குறிப்பிட்ட சில மாம்பழ வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நினைவுகூரத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!