சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நடந்த பரிதாபம்!

கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்களை குறிவைத்து காரை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். சாலையோரம் அந்த குடும்பத்தினர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார் அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்கள் (வயது 74 மற்றும் 44), மற்றும் ஒரு ஆண் (வயது 46) மேலும் 15 வயதுடைய ஒரு சிறுமி ஆகியோர் அடக்கம். 9 வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் காரை மோதச்செய்து தாக்குதல் நடத்திய 20 வயது நிரம்பிய நபரை 6 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்த கார் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடும்பத்தினர் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!