கொரோனாவால் நீண்ட கால மூச்சு திணறல் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள்.

கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில், கொரோனா நோயாளிகளுக்கு குணம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வந்து 3 மாதங்களுக்குப் பிறகும், சிலருக்கு இன்னும் நீண்ட காலம் ஆன பின்னரும் நுரையீரலில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நுரையீரல் பாதிப்பு வழக்கமான சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுவதில்லை. இதனால் நோயாளிகளிடம் அவர்களது நுரையீரல் இயல்பாக இயங்குவதாக கூறப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ‘ரேடியலாஜி’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

  • கொரோனா தொற்று இன்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படாத நோயாளிகள், நீண்ட கால மூச்சு திணறலை அனுபவிக்கிறபோது, அவர்களது நுரையீரலும் இதுபோன்று சேதம் அடையக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக பெரிய ஆய்வு தேவை.
  • கொரோனாவில் இருந்து மீண்டு 3 மாதங்களுக்கு பிறகும்கூட எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களில் நுரையீரலில் அசாதாரணமாக இருப்பது தெரிய வந்தது. சிலருக்கு, ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து 9 மாதங்களான பின்னர் கூட இதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் பிற மருத்துவ அளவீடுகள் இயல்பாக உள்ளன.
  • பல கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்து பல மாதங்களுக்குப் பிறகும் மூச்சு திணறலை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்களது சி.டி.ஸ்கேன் அறிக்கை நுரையீரல் இயல்பாக செயல்படுவதாக காட்டுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பெர்கஸ் க்ளீசன் கூறுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!