இரவில் உணவை குறைத்து இதை அதிகம் குடிங்க…!

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் கோடை காலத்தில் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியமானது.

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையும். ஏனெனில் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம். உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீரை தொடர்ந்து பருகி நீர்ச் சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

வெறுமனே தண்ணீர் பருகுவதற்கு பதில் இளநீர், மாம்பழ ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், சீரகம் கலந்த பானம் போன்றவற்றை பருகலாம். உடலில் நீர்ச்சத்து சீராக இருந்தால்தான் கோடை காலத்தில் சுறுசுறுப்புடன் இயங்க முடியும். செரிமானம் சுமுகமாக நடைபெறவும் தண்ணீர் உதவுகிறது. இந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகளும் தாதுக்களும் அதிகம் இருக்கும். தயிர் சாப்பிடுவதும் எளிதாக செரிமானம் நடைபெறுவதற்கு துணை புரியும். உடலில் குளிர்ச்சியையும் தக்க வைத்துக்கொள்ள உதவும்.

கோடை காலத்தில் இரவு உணவை குறைவாக சாப்பிடுவது நல்லது. சூப் வகைகள், சாலட்டுகள் போன்றவற்றை சாப்பிடலாம். இவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அதிக உணவு சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு சிரமம் ஏற்படும். அதனால் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பு நேரும். செரிமானம் நன்றாக இருந்தால் அது உடல் எடை குறைப்புக்கும் வழி வகுக்கும். மேலும் வறுத்த, பொரித்த, பேக்கரி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை கலோரிகள் அதிகம் நிரம்ப பெற்றவை. கொழுப்பு உடலில் சேருவதற்கும் காரணமாகிவிடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!