கரும்புள்ளி, பருக்களை கட்டுப்படுத்தும் தக்காளி பேஷியல்!

தக்காளி ஜூஸுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் முகத்திற்கு பேஷியல் செய்வது பற்றி பார்ப்போம்.

பருக்கள், கரும்புள்ளிகளை கட்டுப்படுத்தும் தக்காளி பேஷியல்
தக்காளி ஜூஸை பயன்படுத்தி முகத்துக்கு வசீகரம் சேர்க்கலாம். தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும். தக்காளி ஜூஸுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் முகத்திற்கு பேஷியல் செய்வது பற்றி பார்ப்போம்.

எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் தக்காளி ஜூஸுடன் வெள்ளரிக்காய் மற்றும் தேன் கலந்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை மிக்சியில் அரைத்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும். தக்காளி ஜூசும், வெள்ளரிக்காயும் முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி, முகத்தை பளபளக்கசெய்யும்.

உலர்ந்த சருமம் கொண்டவர்கள் தக்காளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.

சுற்றுப்புற மாசுகளால் சருமத்தில் படியும் அழுக்குகளை போக்குவதற்கு தக்காளி, தயிர், எலுமிச்சை பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும். மாசுவினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தலாம்.

மென்மையான, மிருதுவான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு தக்காளியும், ஓட்ஸும் கைகொடுக்கும். தக்காளிப்பழத்தை கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஓட்ஸை பவுடராக மாற்றிவிட வேண்டும். பின்னர் தலா இரண்டு டேபிள் ஸ்பூன்கள் தக்காளி கூழையும், ஓட்ஸையும் ஒன்றாக பிசைந்து அதனுடன் சிறிதளவு வெள்ளரிக்காய் கூழை சேர்த்து முகத்தில் பூசிவர வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவது அவசியம்.

தக்காளியை கூழாக்கி ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்புடனும் காட்சி தரும்.

சருமத்தில் தென்படும் நிறத்திட்டுகளையும், புள்ளிகளையும் போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதிலும் தக்காளி ஜூஸின் பங்களிப்பு அதிகமிருக்கிறது. தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!