எல்லாத்துக்கும் லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு புகார்..!

தனக்கு எதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

படத்தை தயாரிக்க ரூ.270 கோடி செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பைத் துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார் ஷங்கர்.

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் இப்படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இயக்குனர் சங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்கத் தயாராக இருப்பதாக கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஷங்கர்.

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும், இதன் காரணமாகத் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஷங்கர். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஊதியத் தொகை கிடைக்காததால், தற்போது வேறு படங்களில் பணியாற்ற சென்று விட்டதாகவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு எதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் ஷங்கர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!