கணவர் உயிரை காக்க போராடிய மனைவி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

கொரோனா பாதித்த கணவரைக் காப்பாற்ற அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஆக்சிஜன் அளித்தும் கணவர் இறந்துபோனது உ.பி.யில் சோகத்தை ஏற்படுத்தியது.

வாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தி கணவர் உயிரை காக்க போராடிய மனைவி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
கணவருக்கு வாய் வழியாக மூச்சுக்காற்றை செலுத்தும் மனைவி
புதுடெல்லி:

இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் கணவரின் உயிரைக் காக்க போராடிய மனைவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட ஆட்டோவில் மருத்துவமனைக்கு ரேணு அழைத்துச் சென்றார்.

செல்லும் வழியில் ரவியின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் ஆட்டோவில் தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்சிஜன் அளித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரவி உயிரிழந்தார். கணவரின் இறப்பை தாங்க முடியாத ரேணு கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கணவரைக் காப்பாற்ற மனைவி போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!