நம்பிக்கை இருந்தால் கல்லிலும் பாபாவை தரிசிக்கலாம்..!

கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்து விட முடியாது. ஒருவருக்கு மகான் தரிசனம் தர வேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு மகானின் தரிசனம் கிடைத்துவிடும்.

நம் மனம் பக்குவம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர் நினைத்தால் தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் சாயிநாதர், அனைத்து மகான்களுமே தம்முள் இருப்பதாகவும், தாமே அனைத்து மகான்களாகவும் இருப்பதாகவும் பல நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன் என்கிறார்.

சாயிநாதரின் இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் பொறுமையும். நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம். பாபா தாம் அனைத்து உயிர்களிலும் இருப்பவர் என்று கூறி இருக்கிறார். அவரே தொடர்ந்து என்னுடைய சித்திரத்திலும் நான் உயிருடன் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய்பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறுபவர். ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போது தான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும்.– Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!