தொடை இடுக்குகளில் வரும் தொல்லைகளுக்கு இதுதான் காரணம்..!

சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் உடல் இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. பாமர மக்கள் இதை ‘படை’ என்று அழைக்கின்றனர்.

நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்கு தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.

தூக்கத்தில் அதை சொரிய சொரிய நகங்களில் இருக்கிற பாக்டீரியா கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது ரத்த சர்க்கரையை இன்னும் அதிகரித்துவிடும். இதனால் நோய் தீவிரமடையும். ரத்த சர்க்கரையை சரியாக வைத்திருக்காவிட்டால், நோய் குணமாக அதிக நாள் ஆகும். அதிலும் கோடையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

வழக்கமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்… இப்படி பல இடங்களில் காளான் பாதிப்பு அதிகமாக தெரியும்.

இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ஏற்படும் நோயை ‘தோல் மடிப்பு நோய்’ என்கிறோம். பொதுவாக இந்த இடங்களில் உராய்வு அதிகமாக இருக்கும் என்பதால், மேல் தோல் அடிக்கடி சிதைந்துவிடும். இதன் வழியாக காளான் கிருமிகள் உடலுக்குள் நுழைவது எளிதாகிவிடும். இது தோல் மடிப்பு நோய்க்கு வழிவிடும்.

‘சேற்றுப் புண்’ என பாமரர்களால் அழைக்கப்படும் காளான் நோய் இது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்து புண் உண்டாகும். ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும், கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது. பெரும்பாலும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை, பண்ணை வேலை செய்கிறவர்கள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எல்லா காளான் நோய்களுக்கும் காளான் படைக்களிம்புகளை, பவுடரை தொடர்ந்து பூசி, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தகுந்த மாத்திரைகளை சாப்பிட்டுவந்தால் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தேவைப்படலாம். சுய சுத்தம் மிக முக்கியம். தினமும் இரண்டு முறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம். முதல் நாள் உடுத்திய உடைகளை சோப்பு போட்டு துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது.

அடுத்தவரின் சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது. பருத்தி துணியாலான ஆடைகளே நல்லது. அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது. காளான் படை உள்ளவர்களை தொட்டு பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.