தாய், மகள் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – இளநீர் வியாபாரி பகீர் தகவல்..!

தாய், மகள் வயலில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்த இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவர் இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இடையார்பாளையம் அருகே உள்ள தனது வயலுக்கு சென்ற, விஜயலட்சுமியும் அவரது மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க, ஏ.டி.எஸ்.பி., பாண்டியன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் சொத்து பிரச்சினை தொடர்பாக இந்த இரட்டை கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் இளநீர் வியாபாரி இருசப்பன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைக்காகத் தாய் மற்றும் மகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், நகைகளைக் கொண்டு சென்று அடகுக் கடையில் வைத்தபோது, அதில் பாதி நகை கவரிங் நகைகள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்ததாகவும் இருசப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, இளநீர் வியாபாரியைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு கிராம் தங்க நகையைப் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருசப்பன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!