கைதான நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின்…!


சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சின்னதிரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுதாக்கல் செய்தார். இதனிடையே சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதேபோல் சித்ராவின் செல்போன் உரையாடல்களும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!