3 கோடி வரதட்சணை… முதலிரவுக்கே குடிபோதையில் வந்த என்ஜினீயர்!


பெங்களூருவில் ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து நடந்த திருமணத்தில், முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன், மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு எச்.ஏ.எல். அருகே லால்பகதூர் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பரத், என்ஜினீயர். இவருக்கும் தொழில்அதிபரின் மகளான ஸ்ராவனிக்கும் 2 வீட்டு குடும்பத்தினரும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி பெங்களூருவில் உள்ள திருமண மண்டபத்தில் விமரிசையாக பரத், ஸ்ராவனிக்கு திருமணம் நடந்திருந்தது. திருமணத்தின் போது ஸ்ராவனியின் குடும்பத்தினர், பரத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், ரூ.5 லட்சத்திற்கு ஒரு வைர மோதிரத்தை வரதட்சணையாக கொடுத்திருந்தனர்.

ஒட்டு மொத்தமாக ரூ.3 கோடிக்கு மேல் வரதட்சணை கொடுத்ததுடன், பல லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து தனது மகள் ஸ்ராவனியின் திருமணத்தை, அவரது தந்தை நடத்தி இருந்தார். இந்த நிலையில், முதலிரவு அன்றே மதுஅருந்திவிட்டு குடிபோதையில் பரத் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து ஸ்ராவனி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் குடிபோதையில் ஸ்ராவனியிடம் அவர் பேசியுள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்ததால் பரத்திடம் அவர் பேச மறுத்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், முதலிரவு அன்றே தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

அதன்பிறகு, பரத்தை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி முதலிரவை, மறுநாள் நடத்த முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் மறுநாள் மட்டுமின்றி கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வராமல் மதுஅருந்திவிட்டு பரத் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிபோதையில் இரவில் வீட்டுக்கு வந்து ஸ்ராவனியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பரத்தின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

கணவரின் தொல்லையை ஒரு மாதம் பொறுத்திருந்த ஸ்ராவனி நடந்த சம்பவங்கள் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்து, பின்னர் எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக பரத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் பரத்திற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அதனை மறைத்து தன்னை 2-வது திருமணம் செய்திருப்பதாகவும், பரத் என்ஜினீயர் இல்லை என்றும், அவர் எஸ்.எஸ்.எல்.சி. தான் படித்திருப்பதாகவும் ஸ்ராவனி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் பரத்திடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கையையும் ஸ்ராவனி எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!