சார்ஜரில் இருந்த செல்போன்… தலையில் டி.வி. விழுந்து 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்..!


சார்ஜரில் இருந்த செல்பானை எடுக்க முயன்ற போது தலையில் டி.வி. விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 3 வயது மகன் கவியரசு.

நேற்று முன்தினம் இரவு பாலாஜி தனது செல்போனை, சுவரில் அமைக்கப்பட்டு இருந்த அலமாரி சிலாப்பில் இருந்த டி.வி.க்கு அருகே சார்ஜ் போட்டு வைத்து இருந்தார். அப்போது அந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.

உடனே அருகில் இருந்த கவியரசு, செல்போனை எடுக்க முயன்றான். அவன், சார்ஜர் வயருடன் இருந்த செல்போனை பிடித்து இழுத்தான். இதில் வயர் சிக்கியதால் எதிர்பாராதவிதமாக அலமாரியில் இருந்த டி.வி. திடீரென சரிந்து குழந்தை கவியரசு தலையில் விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவன் வலியால் அலறி துடித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை கவியரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!