கொரோனா பரவ அவர்தான் காரணம்.. பில்கேட்ஸ் மீது குற்றச்சாட்டு.. புதிய புகார்!


உலகம் முழுக்க கொரோனா பரவ பில் கேட்ஸ்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

பில் கேட்சுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு குறித்து பார்க்கும் முன், பில் கேட்ஸ் ஆறு வருடங்கள் முன் பேசிய விஷயம் ஒன்றை இங்கு நினைவு கூற வேண்டும். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பில் கேட்ஸ், உலகம் முழுக்க வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஆம் கொரோனா மனிதர்களை தாக்கும் முன்பே, கொரோனா போல ஒரு வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் கொரோனா என்ற பெயரை மட்டும்தான் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த வைரஸ் இப்போது எப்படி எல்லாம் செயல்படுகிறதோ அதை அப்படியே குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம்.. எபோலா வந்தால் உடனே அறிகுறி தெரியும். இதனால் பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்து விட்டது.ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது, அறிகுறியே இல்லாமல் உலகம் முழுக்க வைரஸ் பரவும். தங்களுக்கு வைரஸ் தாக்கியதே தெரியாமல் பலர் உலகம் முழுக்க வைரஸ்களை பரப்ப வாய்ப்பு உள்ளது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது தற்போது நடக்கும் வைரஸ் தாக்குதல்களை மிக சரியாக கணித்து பில் கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். இதை பலரும் பாராட்டி இருந்தனர். அட அவருக்கு செம மூளை. எதிர்காலத்தில் நடக்கும் போகும் விஷயத்தை மிக சரியாக கணித்து இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தனர். வெகு சிலர் இந்த பேச்சு குறித்து சந்தேகம் எழுப்பினார்கள். அதாவது எப்படி கொரோனா குறித்து பில் கேட்ஸ் முன்பே பேசினார் என்று அவர் மீதே சந்தேகம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் நேரடியாக பில் கேட்ஸ் மீது புகார் வைத்துள்ளார். இந்த வைரஸ் பரவியதிலும் அது உருவானதிலும் பில் கேட்சுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுகுறித்து விவாதம் செய்யவேண்டும். நான் சொல்லும் கருத்தை சிலர் தவறு என்று சொல்வார்கள், சிலர் சரியென்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்வதை விவாதம் செய்தே ஆக வேண்டும்.

பில் கேட்ஸ் மற்றும் சில பணக்காரர்கள் மருந்துகளை விற்பனை செய்யவும், மக்கள் கையில் மைக்ரோசிப்களை பொருத்தவும், அவர்களை எப்போதும் கண்காணிக்கவும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் என்று நம்புகிறேன். இதனால்தான் கொரோனா பரவுகிறது என்று நான் நினைக்கிறேன். என் உயிரே போனாலும் நான் தடுப்பூசிகளை போட மாட்டேன், என்று ரோஜர் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் புகாரை அமெரிக்காவில் இன்னும் சிலர் வழி மொழிகிறார்கள்.

உலகம் முழுக்க தடுப்பூசிகளை எதிர்க்கும் குழுக்கள் நிறைய இருக்கிறது. ரோஜர் அதேபோல் அமெரிக்காவில் தடுப்பூசிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனால் தற்போது அவர் கொரோனா தடுப்பூசிகளை எதிர்க்க தொடங்கி உள்ளார். உலகம் முழுக்க இருக்கும் சில பணக்காரர்கள் சேர்ந்துதான் இந்த கொரோனா வைரஸை பரப்பி வருகிறார்கள் என்று இன்னும் சிலர் புகார்களை வைக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பில் கேட்ஸ் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார். மொத்தம் 7 நிறுவனங்களை இதற்காக அவர் உருவாக்கி உள்ளார் . கொரோனாவை தடுப்பதற்காக இந்த 7 நிறுவனங்களும் தனி தனியாக வெவ்வேறு மருந்துகளை கண்டுபிடிக்கும். இதில் 2 நிறுவனத்தின் மருந்துகள் கடைசியாக தேர்வு செய்யப்பட்டு அது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!