திருமணமாகி 16 நாளில் புதுப்பெண் தற்கொலை… அதிர்ச்சியில் பெற்றோர்..!


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமணமான 16 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த விளாமரத்துபட்டியை சேர்ந்த சண்முகவேலு, ஜீவரத்தினம் ஆகியோரின் மகன் ரகுபதி(32). இவர் அந்த பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 30-ந்தேதி ரகுபதிக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவுக்கும்(18) உடுமலையில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து தீபா தனது கணவருடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு ரகுபதி தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மகளை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீபாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீபாவின் தந்தை ராமசாமி தளி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தீபாவின் தந்தை ராமசாமி கூறும்போது, நான் இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தீபா. இவள் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். எனது மகளின் புகைப்படத்தை பார்த்து தான் ரகுபதி மற்றும் அவரது தாய் பெண் பார்க்க வந்தனர்.

அப்போது அவர்கள் இப்போதே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்றனர். ஆனால் என்னிடம் தற்போது போதிய பணம் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் நீங்கள் பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி, எனது பெண்ணுக்கு நகை மற்றும் திருமண செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பு அவ்வப்போது எனது மகள் எங்களுக்கு போன் செய்து நலம் விசாரிப்பாள். சம்பவத்தன்று மதியம் 1.30 மணியளவில் எங்களுக்கு போன் செய்தாள்.

ஆனால் திடீரென மாலை 3.30 மணியளவில் எனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் எனது மனைவியுடன் அங்கு சென்றன்.

அப்போது வீட்டில் எனது மகள் தூக்கில் தொங்கிய படி கிடந்தாள். மேலும் அவளது கால் தரையில் தொட்டபடி இருந்தது. மேலும் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை.

எனவே எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தளி போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி நான் தெரிவித்ததற்கு மாறா முதல் அறிக்கையை பதிவு செய்தார்.

மேலும் எனது மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக தளி போலீசார் நடந்து கொள்கின்றனர்.

எனவே எனது மகள் இறப்புக்கான காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு தளி போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றார்.

திருமணமாகி 16 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆர்.டி.ஓ. தீபாவின் கணவர் ரகுபதியிடம் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!