ஒரு ஆண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் பற்றி கணித்த பில் கேட்ஸ்..!


சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட பலர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த உலகம் முழுவதும் விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் பாதிக்கப்பட உள்ளது. இந்த வைரசால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும்.

அந்த வைரசால் உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!