இப்படிப்பட்ட வேலைகள் செய்யும் பெண்களுக்கு மாரடைப்பு வருமாம்


இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி அவற்றை எளிதில் தடுத்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும்.

சமீபத்திய ஆய்வு ஒன்று ஒருவருடைய வேலை கூட இதய நோய் அல்லது பிற இதய நோய்பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. பொதுவாக புகைபிடித்தல், உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறைகளால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக இதய நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் நோய் என்று கூறுவதுண்டு.

ஆனால் பெண்களுக்கு அவர்களின் வேலை காரணமாக அதிகமாக இதய நோய் ஏற்படுத்துவதாக கூறுகிறது. ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், தொழில்துறையை பொறுத்தமட்டில் நிர்வாக பதவிகளில் வகிக்கும் நபர்கள் தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

சில வேலைகள் மற்றவர்களை விட பெண்களின் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாகத் தாக்குகின்றன. அவை எந்தெந்த வேலைகள் என்று ஆய்வு கூறுகிறது

பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, சில வகையான தொழில்களால் பெண்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பட்டியல் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலில் முதல் இடத்தில் பெண் சமூக செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். பெண் சமூக செயல்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் பணியினால் 36% அவர்களுக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக சில்லறை வணிகம் செய்யும் பெண்களுக்கு 33% இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சுகாதார உதவியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்கு 16% இதய நோய் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறதாகவும் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, 14% இதய பாதிப்புடன் செவிலியர்கள் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.


வியர்வை, தலைச்சுற்றல், கால் மற்றும் அடிவயிறு வீக்கம், உறங்குவதில் சிரமம், மூச்சுத்திணறல், படபடப்பு, தோலின் நிறம் மாறுதல், பசியின்மை, உடல் சோர்வு, சளி மற்றும் இருமல், உடல் எடை வேகமாக அதிகரித்தல், இதய வலி, சீரற்ற இதயத்துடிப்பு, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள், உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

மேலும் பணிச்சுமை, கவலை, பதற்றம், மன உளைச்சல், அதீத கோபம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் உள்ளிட்ட காரணங்கள் இதயத்துக்கு எதிரான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், புகைபிடிக்கும் பெண்களுக்கும், கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.

இவர்களுக்கு மாரடைப்பு, மூளை வாதம் ஆகிய இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கு ஏற்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த பாதிப்பு 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விருப்பமில்லா வேலையைச் செய்யும் போது ஒருவித வெறுப்பு மனநிலை ஏற்பட்டு வேலையில் மன அழுத்தம் ஏற்படும். மேலும் வேலையில் மன அழுத்தம், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்கள் இதய நோய் பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன.

இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி அவற்றை எளிதில் தடுத்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும்.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் இதயப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது, போதுமான நேரம் தூக்கம் என்பதும் முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மேலும் மன அழுத்தத்தைக் கையாளுவதை தெரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தினமும் செய்வதால் பதற்றம், கவலை மற்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!