வீட்டில் டி.வி. மின் இணைப்பை பரிசோதித்த போது டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்


வீட்டில் டி.வி.க்கான மின் இணைப்பை பரிசோதித்தபோது மின்சாரம் பாய்ந்து டிராக்டர் டிரைவர் பரிதாபமாகச் செத்தார்.

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த தமிழக பகுதியான கரைமேடு புதுநகர் காலனியை சேர்ந்தவர் கோபி (வயது 38), டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி சுபா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை கோபி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவருடைய மனைவி சுபா, வீட்டில் டி.வி. வேலை செய்யவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

உடனே கோபி டி.வி.யின் சுவிட்சை போட்டு பார்த்தார். ஆனால் டி.வி.க்கு மின்சாரமே வரவில்லை. அதனால் டி.வி.க்கான மின் இணைப்பை பரிசோதிப்பதற்காக சுவிட்ச் பெட்டியில் உள்ள டி.வி. பிளக்கை கழற்ற முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கோபி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதனைக் கேட்டதும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தமிழக பகுதியான தூக்கனாம்பாக்கம் போலீசார் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து சென்று கோபியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!