பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு


ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அவர் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே, அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 12-ந் தேதி புழல் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உடனடியாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பேரறிவாளனை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

பேரறிவாளன் கிருஷ்ணகிரியில் நடந்த அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பறையடித்து உற்சாகமாக இருந்தார். மேலும் தந்தை குயில்தாசனை வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் இன்றுடன் முடிந்தது.

இந்நிலையில், பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!